செய்திகள்

கமல் அரசியல் பிரவேசம்: சொந்த ஊரில் வரவேற்பு

Published On 2018-01-17 07:28 GMT   |   Update On 2018-01-17 07:28 GMT
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை விரிவாக காணலாம்.

பரமக்குடி:

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

பரமக்குடி புதுநகரைச் சேர்ந்த சித்ரா (வயது 35):-

பரமக்குடியைச் சேர்ந்த கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். திராவிட அரசியல் தற்போது வெற்றிடமாக உள்ளது. அந்த இடத்தை நிரப்பவே கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

பரமக்குடியில் பிறந்து இன்று உலகம் முழுவதும் பேசப்படும் கமல்ஹாசன், தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது நடிப்பை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் தமிழக மக்கள் மத்தியில் ஆதரவும், வரவேற்பும் எப்போதும் உண்டு.

தர்மராஜ புரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் 52) கூறுகையில், கமல்ஹாசன் நடிகராக இருந்த கால கட்டத்தில் தமிழக மக்களுக்கு எந்த ஒரு செயல்பாடும் இல்லை. இவர் பிறந்த பரமக்குடிக்கு இதுவரை என்ன செய்தார்? பரமக்குடிக்கு வந்து இதுவரை ரசிகர்களை, பொதுமக்களை சந்தித்தது இல்லை.

தற்போது முதல்வர் கனவை நனவாக்குவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். எனினும் அவர் அரசியலுக்கு வருவதை சொந்த ஊர் மக்களாகிய நாங்கள் வரவேற்கிறோம்.

பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (40):-

நடிகர்கள் அரசியலுக்கு வருவது எந்த வகையிலும் தமிழக மக்களுக்கு நன்மை அளிக்காது. அவர்கள் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முயன்று முதல்வர் கனவோடு அரசியலுக்கு வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News