சேலம்: மேட்டூர் அணைப்பூங்காவில் காவிரி தீர்ப்பு நினைவு தூணை திறந்து வைத்தார் முதல்வர்
சேலம்:
காவிரி நீரை பங்கீடு செய்வதில் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. இதன் காரணமாக மத்திய அரசின் சார்பில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார்.
இதையொட்டி ஜெயலலிதாவின் சாதனையை பாராட்டி தமிழக அரசின் சார்பில் மேட்டூர் பூங்கா நுழைவுவாயிலில் ரூ.1 கோடி மதிப்பில் நினைவுத்தூண் பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூணை சுற்றிலும் புல்வெளிதளம் அமைத்து உள்ளனர்.
இந்த நினைவுத்தூணை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். #tamilnews