செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றம்

Published On 2017-12-12 11:14 GMT   |   Update On 2017-12-12 11:14 GMT
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்ததுடன், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில்  நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.


இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். எனவே, இனி அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும்.

அதேசமயம், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர். எனவே, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் இல்லை. 
Tags:    

Similar News