செய்திகள்
மதுரையில் மத்திய சிறையில் கைதிகள் மோதல்
மத்திய சிறையில் கைதிகளிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மத்திய சிறையில் மகபூப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தரபாண்டி, மாய கிருஷ்ணன், ஆனந்தகுமார் ஆகியோரும் மத்திய சிறையில் உள்ளனர்.
இதே சிறையில் மணிகண்டனின் உறவினர் வித்யானந்த் என்பவரும் கைதியாக உள்ளார். இவருக்கும், சுந்தரபாண்டி தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று வித்யானந்த், அதே சிறையில் உள்ள அவரது நண்பர்கள் சிவக்குமார், சதாம் உசேன், ராஜா ஆகியோர் சுந்தரபாண்டி தரப்பினரிடம் தகராறு செய்தனர்.
4 பேரும் சேர்ந்து சுந்தர பாண்டி, மாயகிருஷ்ணன், ஆனந்தகுமார் ஆகியோரை தாக்கினர். மோதல் குறித்து உதவி ஜெயிலர் ராஜேந்திரன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.