செய்திகள்

உறவினரை தாக்கிய வழக்கில் மனைவியை போலீசார் கைது செய்ததால் கணவர் தற்கொலை

Published On 2017-11-18 04:53 GMT   |   Update On 2017-11-18 04:53 GMT
உறவினரை தாக்கிய வழக்கில் மனைவியை போலீசார் கைது செய்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

சோழவரம் ஒன்றியம் ஆரணி தெலுங்கு காலனியை சேர்ந்தவர் ரமேஷ். லாரி டிரைவர். இவரது மனைவி மகிளா. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷின் தங்கை அனுராதாவுக்கும் மகிளாவுக்கும் கழிவுநீர் செல்வதில் கடந்த 15-ந் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து மகிளா தனது சகோதரர் தனஞ்செழியன், தாய் செஞ்சம்மாள், சகோதரி கலா ஆகியோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மகிளாவின் உறவினர்கள் அனுராதாவிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி அனுராதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அனுராதாவின் புகாரின் பேரில் ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து மகிளா, உறவினர்கள் தனஞ்செழியன், செஞ்சம்மாள், கலா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து பொன்னேரி முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்ய அழைத்து சென்றனர். போலீசார் சமரசம் செய்து மனைவி மற்றும் உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று ரமேஷ் எதிர்பார்த்தார்.

இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேள்விபட்ட மகிளா நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து விட்டார்.உடனடியாக அவரை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

மேலும், போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரமேஷின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News