செய்திகள்

அண்ணா மேம்பாலம் அருகே தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

Published On 2017-11-12 09:59 GMT   |   Update On 2017-11-12 09:59 GMT
அண்ணா மேம்பாலம் அருகே சொகுசு கார் மோதி ஆட்டோ டிரைவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து குடிபோதையில் இருந்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலை ஓரத்தில் இரவு நேரத்தில் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் தூங்குவது வழக்கம். நேற்று இரவும் சில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1 மணியளவில் சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வேகமாக வந்தது. அதில் 5 பேர் குடிபோதையில் இருந்தனர். திடீரென்று அந்த கார் தறிகெட்டு ஓடி சாலை ஓரம் நிறுத்தியிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் அனைத்து ஆட்டோக்களும் நொறுங்கின.

ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் (38) என்ற ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சாஸ்திரிநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சொகுசு காரில் இருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அந்த காரை முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் ஒட்டி வந்ததாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News