செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2017-10-17 07:57 GMT   |   Update On 2017-10-17 07:57 GMT
நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம், தங்கச்சி மடம், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் மன்னார் அருகே இந்திய கடல் எல்லையையொட்டியுள்ள நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி இல்லை. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை எச்சரித்தனர்.

மேலும் இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

இந்தப்பகுதியில் இனிமேல் மீன்பிடிக்க வரக் கூடாது. மீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தினர். இதனால் பீதி அடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது தங்கச்சிமடம், மாந்தோப்பைச் சேர்ந்த விசுவாசம் என்பவரின் படகில் வந்த மீனவர்கள் மரியநேசர் (வயது 32), சந்தியா (35), மத்தியபாலன் (19), கிரீன்சன் (30), ரோமன் (27), பாஸ்கரன் (35), சுதன் (31), மோசஸ் (36) ஆகிய 8 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இலங்கை தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள் அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தப்பி வந்த ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து எங்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் நாங்கள் பிழைப்பு நடத்துவதே கஷ்டமாக உள்ளது.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் நாங்கள் மீன்பிடிக்கும் தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு தான் செல்ல வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News