செய்திகள்

டெங்கு உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2017-10-10 05:36 GMT   |   Update On 2017-10-10 05:36 GMT
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாதாரண காய்ச்சல் வந்தால்கூட டெங்குவாக இருக்கலாம் என்று மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொது சுகாதாரத்திற்கு சவாலாக உள்ளதாகவும் கொசுக்களை ஒழிக்க நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெங்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் அக்டோபர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையும் அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News