செய்திகள்

குமார் எம்.பி.யை மிரட்டியதாக புகார்: தினகரன்-நடிகர் செந்தில் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published On 2017-09-12 08:02 GMT   |   Update On 2017-09-12 08:02 GMT
தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருச்சி குமார் எம்.பி. அளித்த புகாரின் பேரில் டி.டி.வி.தினகரன், நடிகர் செந்தில் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி:

திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ப.குமார். இவரை அ.தி.மு.க. (அம்மா) இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீக்கினார்.

புதிய பாசறை செயலாளராக ஏ.எல்.விஜய் என்பவரை டி.டி.வி.தினகரன் நியமித்தார்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த ப.குமார் எம்.பி., தன்னை கட்சியில் இருந்து நீக்க தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை என கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் குமார் எம்.பி. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், டி.டி.வி.தினகரன் தன்னை தொலைபேசியில் மிரட்டியதாகவும், நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்தார் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என் றும் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்துமாறு மாநகர குற்றப் பிரிவு போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அருண் உத்தரவிட்டார். அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமி‌ஷனர் அருள்அமரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகி யோர் டி.டி.வி.தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News