செய்திகள்
சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை படத்தில் காணலாம்.

4 நாட்கள் தொடர் விடுமுறை: விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 3 கி.மீ. தூரம் அணிவகுந்து நின்ற வாகனங்கள்

Published On 2017-08-12 05:58 GMT   |   Update On 2017-08-12 05:58 GMT
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 3 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தனர். நேற்று மாலை முதல் அவர்கள் பஸ்-கார், வேன்களில் புறப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதனால் விக்கிரவாண்டி சுங்க சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தது.

3 கிலோ மீட்டர் தூரம் அந்த வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. சுங்கச்சாவடியில் 6 வழிப்பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. நேற்று இரவு முதல் வாகனங்களின் வரத்து அதிகமாக இருந்ததால் மேலும் 3 வழிப்பாதைகள் திறந்து விடப்பட்டன. அதன் வழியாக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.

இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனங்கள் நின்ற இடத்துக்கே சென்று சுங்க வரியை வசூலித்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.

அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
Tags:    

Similar News