செய்திகள்

தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக கீதா ஜீவன்-அனிதா ராதாகிருஷ்ணன் நியமனம்: அன்பழகன் அறிவிப்பு

Published On 2017-06-17 08:28 GMT   |   Update On 2017-06-17 08:28 GMT
தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார்கள் என்று அன்பழகன் அறிவித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பெரியசாமி மறைவெய்தியதாலும்- தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சுப்பிரமணி அப்பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதாலும் இவ்விரு மாவட்டக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற, தூத்துக்குடி விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கீதா ஜீவன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.

திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர்க் கழக நிர்வாகிகள் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சுப்பிரமணி (74, கோவில் பட்டி-சங்கரன் கோவில் ரோடு, கழுகுமலை, கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டம்) தலைமைக் கழகத்தால் தி.மு.க. விவசாயத்தொழிலாளர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News