செய்திகள்

வேட்டைக்கு வைத்த குறி தப்பியது: துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பலி

Published On 2017-05-25 13:29 GMT   |   Update On 2017-05-25 13:29 GMT
ஒட்டன்சத்திரம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பிச்சைமுத்து (வயது45). வடமதுரை அருகில் உள்ள கெச்சேனிபட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல் (40) விவசாயி. இருவரும் நண்பர்கள்.

அடிக்கடி வனப்பகுதியில் வேட்டைக்கு செல்வது வழக்கம். நேற்று இரவு 2 பேரும் கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் அருகில் உள்ள நீலமலைக் கோட்டை பகுதிக்கு வேட்டைக்கு சென்றனர். முயல் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது தன்னிடம் இருந்த துப்பாக்கியை சக்திவேல் அருகில் இருந்த பிச்சைமுத்து விடம் கொடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியை அழுத்தியதில் அதில் இருந்த குண்டு பிச்சைமுத்து வயிற்றில் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிச்சைமுத்து உயிரிழந்தார்.

இதை பார்த்ததும் சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து நடந்த விபரங்களை கூறினார்.

இதனையடுத்து டி.எஸ்.பி. ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்த சக்திவேலை அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் இருந்த துப்பாக்கி லைசென்சு பெற்று வைத்துள்ளாரா? விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News