செய்திகள்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2017-05-24 06:04 GMT   |   Update On 2017-05-24 06:04 GMT
நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
ராமேசுவரம்:

விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க தடைக்காலம் அமலில் இருப்பதால் தற்போது நாட்டுப்படகு மீனவர்களே கடலுக்குச் சென்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாழையைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், மீனவர்கள் தன சேகரன், சதீஷ், மாதவன், சிங்காரவேலன், சத்ய பாலா, சிவா ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களுடன் ஏராளமான நாட்டுப்படகுகளும் மீன்பிடி பணியில் ஈடுபட்டன.

நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

அவர்கள், தமிழக மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்கக்கூடாது. இது எங்கள் எல்லைப்பகுதி எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து மீனவர்கள் அவசர அவசரமாக புறப்பட்டனர்.

அப்போது சில படகுகளில் இருந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கினர். மேலும் சத்யராஜ் படகையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News