செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணமகனுக்கு அரிவாள் வெட்டு

Published On 2017-05-22 15:42 GMT   |   Update On 2017-05-22 15:42 GMT
இன்று திருமணம் நடக்க இருந்த மணமகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்த ராமசாமியா புரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது 25), ஆட்டோ டிரைவர்.

இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் உருவாகி பின்னர் அது முறிந்து போனது. இந்த விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருடன் சுந்தர் ராஜுக்கு விரோதம் ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுந்தர்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவை அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை, அங்குள்ள முக்குரோடு பகுதியில் சுந்தர்ராஜ் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ராஜா தனது அண்ணன் மகேசுவரனுடன் வந்து வழிமறித்து அரிவாளால் வெட்டினார்.

இதில் காயம் அடைந்த சுந்தர்ராஜ் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வெட்டுப்பட்ட சுந்தர் ராஜுக்கு இன்று காலை திருமணம் நடக்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மணமகன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News