செய்திகள்
நகைக்கடை அதிபர் ரத்னாலால்

தொழில் போட்டியில் நகைக்கடை அதிபர் கடத்தி கொலை: தலைமறைவான நண்பரை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2017-04-28 05:12 GMT   |   Update On 2017-04-28 05:12 GMT
உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூர் கிராமத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த நகைக்கடை அதிபர் வழக்கில் தலைமறைவான நண்பரை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருநாவலூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தாலுகா கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ரத்னாலால்(வயது34). இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி இந்திரா(30). இவர்களுக்கு சேட்டன்(3½) என்ற மகனும், குருஷி(1½) என்ற மகளும் உள்ளனர்.

நகைக்கடை அதிபரான ரத்னாலாலும், அதே பகுதியை சேர்ந்த டோக்காராம்(35) என்பவரும் நண்பர்கள்.

கடந்த 23-ந்தேதி இரவு ரத்னாலாலும், அவரது நண்பர் டோக்காராமும் காரில் வெளியே சென்றனர். அதன்பின்பு நகைக்கடை அதிபர் ரத்தினாலால் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து கோட்டமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் யார்? என்று விசாரித்தனர். அப்போது கோட்டைமேடு பகுதியை சேர்ந்த நகைக்கடை அதிபர் ரத்னாலால் என்பது தெரியவந்தது.

நகைக்கடை அதிபரை காரில் கடத்தி சென்று கொலை செய்து விட்டு வயலில் உடலை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

ரத்னாலாலுடன் காரில் வந்த அவரது நண்பர் டோக்காராமை காணவில்லை. மேலும் டோக்காராம் செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது.

தொழில்போட்டியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தலைமறைவான டோக்காராம் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News