செய்திகள்

தாரமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை - என்ஜினீயர் கைது

Published On 2017-04-27 10:48 GMT   |   Update On 2017-04-27 12:14 GMT
தாரமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் தொல்லை செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த கோழிக்காட்டானூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியில் சென்ற மாணவி அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து மாணவியின் தந்தை தாரமங்கலம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கோழிக்காட்டானூரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான விக்னேஷ் (21) என்பவர் திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக கூறி இருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியையும், விக்னேசையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தாரமங்கலம் பஸ் நிலையத்தில் 2 பேரும் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் தொல்லை செய்ததாக விக்னேசை கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் அவரை ஓமலூரில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Similar News