செய்திகள்

வேலூரில் 111 டிகிரி வெயில் சுட்டெரித்தது - இரவில் மின்தடையால் பொதுமக்கள் அவதி

Published On 2017-04-24 08:30 GMT   |   Update On 2017-04-24 08:31 GMT
வேலூரில் 111 டிகிரி வெயில் சுட்டெரித்தது. நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடுமையான புழுக்கத்தில் சிக்கி தவித்தனர்.
வேலூர்:

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

வேலூரில் கடந்த சில நாட்களாக 105 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

எனவே, பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 17-ந்தேதி அதிகபட்சமாக 110.3 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று அதையும் தாண்டி 111.2 டிகிரி வெயில் பதிவானது.

இதனால் பகலில் அனல் காற்று வீசியது. ரோட்டில் பொதுமக்களின் நடமாட முடியவில்லை. அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பைக்கில் செல்பவர்களையும் அனல் காற்று தாக்கியது.

வெயில் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் ஆங்காங்கே இருக்கும் தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் குவிந்தனர். பகலில் கொளுத்திய வெயில் தாக்கத்தின் உஷ்ணம் இரவிலும் உணரப்பட்டது. மின்விசிறிகள் அனல் காற்றை கக்கியது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் பொதுமக்கள் தூங்கமுடியாமல் அவதிப்பட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையான புழுக்கத்தில் சிக்கி தவித்தனர். வெயில் கொடுமையோடு மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

இதேபோல திருவண்ணாமலையிலும் 107.5 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் வேலூர்-திருவண்ணாமலை மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Similar News