செய்திகள்
மலைப்பகுதியில் சிறுத்தை பதுங்கியிருப்பதாக கூறப்படும் பாறை பகுதியை படத்தில் காணலாம்.

ஆனைமலை அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

Published On 2017-04-22 09:32 GMT   |   Update On 2017-04-22 09:33 GMT
ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு வனப்பகுதி அருகில் ஓட்டக்கரடு என்னும் பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆனைமலை:

ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு வனப்பகுதி அருகில் ஓட்டக்கரடு என்னும் பாறை பகுதி உள்ளது.

வருவாய்த் துறைக்குச் சொந்தமான இந்த மலைப் பகுதியில் குகை போன்ற அமைப்புடன் பாறைகள் உள்ளன.

மேலும் அடர்ந்த காடுகள் உள்ளதால் வன விலங்குகள் தங்குவதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இந்த மலையைச் சுற்றிலும் உள்ள பட்டா நிலங்களில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர்.

இவர்களின் ஆடு, கன்றுக்குட்டி மற்றும் நாய் உள்ளிட்டவற்றை சிறுத்தை அடித்துக் கொன்று பாறை இடுக்கில் பதுங்கிக் கொள்கிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வனத்துறையிடம் புகார் செய்ததின் பேரில் கடந்த சில நாட்களாக வனத்துறை மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் இரவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் சிறுத்தையை நேரில் பார்த்தனர். வனத்துறையினரின் நடமாட்டம் அறிந்த சிறுத்தை காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஓட்டக்கரடு மலைப் பகுதியைச் சுற்றிலும் சிறுத்தையின் கால் தடம் இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர்.

இதனையடுத்து வனப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






Similar News