செய்திகள்
மாயவன்

புதுவையில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை - போலீஸ் குவிப்பு

Published On 2017-04-18 06:24 GMT   |   Update On 2017-04-18 06:24 GMT
புதுவையில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, அரசியல் முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வில்லியனூர்:

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் (வயது 43). காங்கிரஸ் பிரமுகரான இவர் ஊசுடு தொகுதி முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆவார்.

நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் வில்லியனூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார்.

கூடப்பாக்கம் செல்லும் வழியில் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மாயவன் மறைவான பகுதிக்கு சிறுநீர் கழிக்க சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அந்த சந்தப்பத்தை பயன்படுத்தி மாயவனை தடியால் தாக்கியது. பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

அப்போது இதனை பார்த்த மாயவனின் நண்பர்கள் ஓடி வந்தனர். ஆனால், அந்த கும்பல் கத்தியை காட்டி உங்களுக்கும் இதே கதி ஏற்படும் என்று மிரட்டியது. இதனால் அவர்களை தடுக்க முடியவில்லை. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினையால் மாயவன் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

மேலும் அரசியல் முன் விரோதத்தில் மாயவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் காரணமாக கூடப்பாக்கத்தில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



Similar News