செய்திகள்

செல்போனில் 50 நொடிகளில் ரெயில் தட்கல் டிக்கெட் எடுக்கலாம்

Published On 2017-04-17 10:24 GMT   |   Update On 2017-04-17 10:24 GMT
ஆன்லைனில் (இ-வேலட்) முன்கூட்டியே பணம் செலுத்தியிருந்தால் 50 நொடிகளில் செல்போனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து விடலாம்.
வேலூர்:

செல்போன்களில் ரெயில் டிக்கெட் எடுக்க நேரம் மாற்றியமைக்கபட்டதால் 50 நொடிகளில் முன்பதிவு செய்யலாம்.

ரெயில்வே தட்கல் டிக்கெட் பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து முன்பதிவு செய்கின்றனர். ஆண்ட்ராய்டு செல்போன்கள் வந்த பிறகு அதில் இணையதள வசதியுடன் தட்கல் எடுக்கும் முறை கடந்த 2014-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

ரெயில்வே டிக்கெட் ஆப்ஸ் டவுன்லோடு செய்தவர்கள் செல்போன்களில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டது. செல்போன்களில் தட்கல் முன்பதி செய்தால் டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என ரெயில்வே நிர்வாகம் கருதியது.

இதற்காக செல்போனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தை ரெயில்வே நிர்வாகம் மாற்றியமைத்தது. வழக்கமாக ஏ.சி. பிரிவுக்கு காலை 10.30 மணிக்கும், படுக்கை வகுப்புக்கு காலை 11 மணிக்கும் தட்கல் முன்பதிவு தொடங்கும்.

கவுன்டரில் முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்துக்கு செல்போனில் முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டிருக்கும். 30 நிமிடம் காலதாமதமாக செல்போனில் முன்பதிவு செய்யலாம். இதனால் கவுன்டர்களில் காத்திருப்பவர்களுக்கு எளிதில் டிக்கெட் கிடைக்கும்.

கடந்த 9-ந்தேதி முதல் செல்போன்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தை ரெயில்வே நிர்வாகம் தளர்த்தியுள்ளது. இதனால் தட்கல் முன்பதிவு தொடங்கும் அதே நேரத்தில் செல்போனில் முன்பதிவு செய்யலாம். ஆன்லைனில் (இ-வேலட்) முன்கூட்டியே பணம் செலுத்தியிருந்தால் 50 நொடிகளில் செல்போனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து விடலாம்.

இந்த வசதியாக இனி டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு தட்கல் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது அரிதாகிவிட்டது.

Similar News