செய்திகள்

கயத்தாறு அருகே பெட்ரோல் ஊற்றி டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

Published On 2017-04-12 10:46 GMT   |   Update On 2017-04-12 10:46 GMT
கயத்தாறு அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் வெடித்து சிதறின.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோர பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

அதன்படி கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் சாலையோரம் இயங்கி வந்த மதுக்கடைகளும் அகற்றப்பட்டதால், செட்டி குறிச்சியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன் காரணமாக நாள்தோறும் ரூ.1 லட்சம் வரை மதுபாட்டில்கள் விற்பனையாகின.

அதிக அளவில் திரண்டு வரும் மதுபிரியர்களின் எல்லையில்லா ரகளையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், செட்டிக்குறிச்சியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையையும் அகற்ற வலியுறுத்தி இக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை சமரசப்படுத்திய போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை இங்கு வந்த மர்ம நபர்கள், இந்த டாஸ்மாக் கடையின் பின்பக்கம் உள்ள ஜன்னலில் உள்ள ஓட்டை வழியாக பெட்ரோல் ஊற்றி கடைக்கு தீவைத்து விட்டு தப்பி விட்டனர். தீ மளமளவென பரவியதால் கடையின் ஒரு பகுதியில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் வெடித்து சிதறின.

மேலும் விற்பனை மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தீயில் கருகின. அதே வேளையில் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சம் மதுபான பாட்டில்கள் தீ விபத்தில் இருந்து தப்பின.

பின்னர் கடையில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி வியாபாரிகள், கடையின் மேற்பார்வையாளரான பெரியசாமிபுரத்தை சேர்ந்த கொம்பையா மற்றும் கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரும், கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் தீயை போராடி அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து டாஸ்மாக் கடைக்கு தீவைத்த மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News