செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த பட்டதாரி பெண் கல்லால் தாக்கி கொலை: கல்லூரி மாணவர் வெறிச்செயல்

Published On 2017-04-03 09:59 GMT   |   Update On 2017-04-03 09:59 GMT
சேலம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பட்டதாரி பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்டையாம்பட்டி:

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்த காளிப்பட்டி அருகே உள்ள குருக்கலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்ராசு. இவரது மனைவி மேகலா (வயது 25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு தற்போது யாஸ்வின் (3) என்ற மகன் உள்ளார். பட்டதாரி பெண்ணான மேகலா நேற்று மாலை 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள பாறை பகுதிக்கு சென்றார்.

வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று தேடி பார்த்தனர்.

அப்போது தலையில் ரத்த காயங்களுடன் மேகலா அங்கு பிணமாக கிடந்தார். இதை அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் அவரது ஆடைகளும் கிழிந்து அலங்கோலமான நிலையில் கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நாமக்கல் எஸ்.பி. மகேஷ்வரன் கூடுதல் எஸ்.பி. ராமசாமி, டி.எஸ்.பி.கள் சுரேஷ்குமார், சுஜாதா மற்றும் மல்ல சமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மேகலா உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு-


நேற்று மாலை மேகலா இயற்கை உபாதை கழிக்க பாறை பகுதிக்கு சென்ற போது அருகில் உள்ள கோணங்கிபாளையத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் மகனான அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ. படிக்கும் வேலு (20) என்பவரும் அங்கு சென்றார். குடிபோதையில் இருந்த வேலுவுக்கு, மேகலாவை பார்த்ததும் காமம் தலைக்கேறியயது. இதனால் தன் ஆசைக்கு இணங்குமாறு மேகலாவை வற்புறுத்தினார்.அதற்கு மறுத்ததால் மேகலாவின் ஜாக்கெட்டை கிழித்தார். ஆனாலும் மேகலா உடன்பட மறுத்ததால் காம போதையில் இருந்த வேலு ஆத்திரம் அடைந்தார்.

உடனே அருகில் இருந்த கல்லால் மேகலா தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மேகலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்ததும் இதை பார்த்த வேலு அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த வேலுவை பிடித்து மல்ல சமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News