பெரியகுளம் அருகே மாணவியை கடத்தி கர்ப்பிணியாக்கிய வாலிபர்
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகள் தேவி (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற தேவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தந்தை தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியை தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் வேலை பார்க்கும் வினோத்குமார் (26) என்பவர் தேவியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இதனை அறிந்த வினோத் குமார் மாணவியை அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது மாணவி தெரிவிக்கையில் தன்னை வினோத்குமார் கடத்திச் சென்று திருமணம் செய்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார்.
இதைக் கேட்டு தேவியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர். 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வினோத்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.