செய்திகள்

மார்த்தாண்டத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2017-03-26 07:58 GMT   |   Update On 2017-03-26 07:58 GMT
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழித்துறை:

மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக வைக்கப்பட்டு உள்ளது.

இன்று அதிகாலை மார்த்தாண்டத்தில் மேம்பால பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்றனர்.

அப்போது அந்த மையத்தில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களில் ஒரு எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஏ.டி.எம். எந்திரத்தின் மேல்பகுதி உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. அதேசமயம் பணம் வைக்கப்பட்டு இருக்கும் கீழ் பகுதி எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது.

நள்ளிரவில் கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் எந்திரத்தின் மேல்பகுதியை உடைத்துள்ளனர். பின்னர் பணம் இருக்கும் லாக்கரை திறக்க முயன்றுள்ளனர். அதனை திறக்க முடியாததால் அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது.

வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். வங்கி அதிகாரிகள் அந்த ஏ.டி.எம். மையத்தில் ரூ.25 லட்சம் பணம் வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர். எந்திரத்தை உடைக்கும் கொள்ளையர்களின் முயற்சி பலன் அளிக்காததால் அந்த ரூ.25 லட்சம் பணம் தப்பியது.

இதைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கொள்ளையர்களின் உருவம் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே அந்த காமிராவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்த இடம் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதியாகும். அப்படியிருந்தும் கொள்ளையர்கள் துணிச்சலாக உள்ளே புகுந்து கைவரிசை காட்ட முயன்று இருப்பது மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News