செய்திகள்

தனியார் பள்ளியில் ஆசிரியை அடித்ததில் 1-ம் வகுப்பு மாணவர் காயம்: போலீசில் பெற்றோர் புகார்

Published On 2017-03-25 11:44 GMT   |   Update On 2017-03-25 11:44 GMT
மார்த்தாண்டம் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை அடித்ததில் 1-ம் வகுப்பு மாணவனுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

குழித்துறை:

மார்த்தாண்டத்தை அடுத்த மாமூட்டுக்கடையை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தது முதல் அழுது கொண்டே இருந்தார்.

இது பற்றி மாணவரின் தாயார் அவரிடம் கேட்டபோது பள்ளியில் ஆசிரியை அடித்து விட்டதாக கூறினார். அடிப்பட்ட இடத்தை பார்த்த போது மாணவரின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டிருப்பதை கண்டார்.

பள்ளியில் மகனை ஆசிரியை தாக்கிய விபரம் அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே வீட்டுக்கு விரைந்து வந்த கண்ணன், மகனை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து கண்ணன், மார்த்தாண்டம் போலீசிலும் புகார் செய்தார். அதில் 6 வயதே ஆன தன் மகன், பள்ளி பாடத்திற்கான கேள்விக்கு பதில் கூறாததால் அவரை ஆசிரியை கடுமையாக தாக்கி உள்ளார்.

இதனால் சிறுவனின் கால், கைகளில் வீக்கம் ஏற்பட்டு இரவு முழுவதும் வலியால் அலறியபடி இருந்தான். அவனது காயத்திற்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News