செய்திகள்

காட்பாடி பி.டி.ஓ. அலுவலக வளாகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

Published On 2017-03-24 10:08 GMT   |   Update On 2017-03-24 10:09 GMT
காட்பாடி பி.டி.ஓ. அலுவலக வளாகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் அடுத்த பழைய காட்பாடி தருமலிங்கம் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 58). காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (பி.டி.ஓ.) உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மகாலிங்கத்திற்கு அமுதவள்ளி என்ற மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மகாலிங்கம் வரும் 31-ந் தேதி பணி ஓய்வு பெற இருந்தார். அவருக்கு பிரியா விடை கொடுக்க விருந்தளிக்க சக ஊழியர்கள் ‘அழைப்பிதழ்’ தயார் செய்திருந்தனர். வழக்கம் போல் இன்று காலை 8 மணிக்கு மகாலிங்கம் பணிக்கு சென்றார்.

பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிறகு, அலுவலக வளாகத்தில் உள்ள புங்கை மரத்திற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மகாலிங்கம் தூக்கில் தொங்கியதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக, காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் பி.டி.ஓ. அலுவலகத்திற்கு விரைந்து சென்றனர். மகாலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, மகாலிங்கத்தின் சட்டை பாக்கெட்டில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தற்கொலை செய்து கொண்டதற்கான? காரணத்தை மகாலிங்கம் எழுதியுள்ளார்.

உயர் அதிகாரிகள் எனக்கு எந்தவிதமான தொந்தரவும் செய்யவில்லை. எனது குடும்பத்தை கவனத்திக் கொள்ளுமாறு அவர் கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் பாண்டி, கடிதத்தை கைப்பற்றி மகாலிங்கம் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஏதேனும் குடும்ப விவகாரத்தில் தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News