செய்திகள்

திண்டுக்கல்லில் வெள்ளரி விலை கடும் உயர்வு

Published On 2017-03-23 16:55 GMT   |   Update On 2017-03-23 16:55 GMT
வறட்சி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளரிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்:

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல் இருப்பதால் பகல் பொழுதில் அனல் காற்று வீசுகிறது. இதனால் குளிர்பானங்கள் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் வெள்ளரிக்காய் வாங்கி செல்கின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள மாரம்பாடி, உண்டார்பட்டி, கிரியம் பட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர். வறட்சி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளரிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் ஓடைப்பட்டி ராமர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக வெள்ளரிக்காய் வரத்து போதிய அளவு இருந்தது. ஒரு காய் ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்தோம். தற்போது வெள்ளரி வரத்து குறைந்துவிட்டது. இதனால் ஒரு காய் விலை ரூ.8 ஆக அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் காய்களை எண்ணிக்கை விலையில் வாங்குகிறோம். சோழவந்தானில் இருந்து வரும் காய்கள் கிலோ கணக்கில்தான் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது ஒரு கிலோ வெள்ளரி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி பழங்கள் தரத்தை பொறுத்து ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெயில் நேரம் என்பதால் பலரும் குளிர்ச்சிக்காக வெள்ளரி வாங்கி செல்கின்றனர். வறட்சி காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விற்பனைக்கு போதிய வெள்ளரி கிடைப்பதில்லை என்றார்.

Similar News