செய்திகள்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறியது விடுதலைச் சிறுத்தைகள்

Published On 2017-03-18 12:32 GMT   |   Update On 2017-03-18 12:32 GMT
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் நலக் கூட்டியக்கத்தில் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கடந்த 2015-ம் ஆண்டில் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பொதுப் பிரச்சனைகளுக்காக போராட்டங்களை நடத்தி வந்தது. 2016-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கமானது, ஒரே கூட்டணியாக போட்டியிட முடிவு செய்தது. ஆனால், இதில் உடன்பாடு இல்லாததால் இக்கூட்டமைப்பில் இருந்து மனித நேய மக்கள் கட்சி வெளியேறியது.

2016-ம் ஆண்டில் மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்த இக்கூட்டியக்கம் தே.மு.தி.க மற்றும் த.மா.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. ஆனால், ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. எனினும் தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்து பொதுப் பிரச்சனைகளில் தங்களது போராட்டங்களை தொடர்ந்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் கூடிய ம.தி.முக பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.



அடுத்த மாதம்12-ம் தேதி சென்னை ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மட்டும் போட்டியிடுவதாக தனித்து முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  அறிவித்துள்ளார். மேலும், பொதுப் பிரச்சனைகளில் மக்கள் நலக் கூட்டியக்கம் தொடர்ந்து போராடும் எனவும், அதிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News