திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் கார் மூலம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன்கள் வந்தனர். அவர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் திருக்கல்யாணத்திற்கு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்து இருந்த மதுரை மீனாட்சியம்மன்-சுந்தரே சுவரரையும் தரிசனம் செய்தனர்.
முன்னதாக ஓ.பி.எஸ் சுக்கு கோவில் வாசலில் முன்னாள் எம்.எம்.ஏ. முத்து ராமலிங்கம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர், ஆண்டாள் கோவிலில் சாமிதரிசனம் செய்தனர். அங்கு அவரை வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன்,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சங்கரன் கோவில் முத்துச்செல்வி, சிவகாசி பாலகங்காதரன், அ.தி.மு.க. பிரமுகர்கள் ஆணழகன், வக்கீல் கண்ணன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
அதன் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குலதெய்வமான வனபேச்சியம்மன் கோவிலுக்கு சென்றனர்.