சரக்கு-சேவை வரிகளால் தமிழகம் பாதிக்காதவாறு சட்டவரவை நிறைவேற்ற வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
தஞ்சாவூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிகாரப் போட்டியில் அ.தி.மு.க.உள்ளது. அதிகார வேட்கையில் தி.மு.க.உள்ளது. கொல்லை புறம் வழியாக தமிழகத்தில் நுழைய முயற்சிக்கிறது பாரதீய ஜனதா, எனவே தமிழக மக்களின் பிரச்சினையை கண்டு கொள்ள யாரும் இல்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்த வரை தமிழக மக்களின் பிரச்சினைக்காக போராடுகிறது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தி உள்ளோம். சரக்கு மற்றும் சேவை வரி சட்ட வரவை பொருத்தவரை தமிழகத்துக்குப் பாதகமானது.
தமிழ்நாடு உற்பத்தி சார்ந்த மாநிலம். எனவே, சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தால் தமிழகம் பாதிக்காத அளவுக்கு திருத்தம் கொண்டு வர வேண்டும். மேலும் எந்தெந்த மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதோ, அவற்றுக்கும் ஈடுகட்டும் அளவுக்கு பொருத்தமான திருத்தங்களுடன் தான் சரக்கு மற்றும் சேவை வரி சட்ட வரவை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.