செய்திகள்

பாரதிய ஜனதாவில் இணைந்த எம்.ஜி.ஆரின் உறவினர்: பிரதமர் மோடியிடம் ஆசி பெற்றார்

Published On 2017-02-27 10:04 GMT   |   Update On 2017-02-27 10:04 GMT
அ.தி.மு.க.வில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் எம்.ஜி.ஆரின் உறவினர் இணைந்தனர். இவர்கள் பிரதமர் மோடியிடம் ஆசியும் பெற்றனர்.
கோவை:

எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் சக்கரபாணியின் மகள் லீலாவதி, அவரது மகன் பிரவீண் ஆகியோர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்தநிலையில்,கடந்த 24-ந் தேதி ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கோவை வந்தார். அப்போது லீலாவதி, பிரவீண் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றனர்.

கோவை விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு புரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போது எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானம் கொடுத்தவர் லீலாவதி ஆவார். அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். பெயரை பல அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட அவர் வழி நடக்கவில்லை. வலிமையான பாரத பிரதமர் மோடி மட்டுமே மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நான் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தேன். ஆனால் இன்று அ.தி.மு.க. தனது பலத்தை இழந்து விட்டது. கேப்டன் இல்லாத கப்பல் பயணத்தை போல பயணிக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. நம்பிக்கையை இழந்து விட்டது. பல கட்சிகளும் எம்.ஜி. ஆரை மறந்து விட்டன. ஒரு அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா தான் நம்பிக்கையை தருகிறது. விரைவில் நாங்கள் மக்களை சந்திக்க உள்ளோம். குறிப்பாக கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு சேகரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News