செய்திகள்

கோத்தகிரி அருகே கடும் வறட்சியால் 2 கரடிகள் பலி

Published On 2017-02-25 13:40 GMT   |   Update On 2017-02-25 13:39 GMT
நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள 2 கரடிகள் பரிதாபமாக இறந்து கிடந்தன.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் குடிநீர் மற்றும் உணவுக்காக ஊருக்குள் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களில் மட்டும் முதுமலையில் 2 யானை, சீகூரில் ஒரு யானை, தெங்குமகடாவில் ஒரு யானை என மொத்தம் 4 யானைகள் கடும் வறட்சியால் பரிதாபமாக இறந்து விட்டன.

இந்நிலையில் கீழ் கோத்தகிரி சோலூர் மட்டம் பிரிவு அரக்கோடு குள்ளக்கரை செல்லும் சாலையில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் 2 கரடிகள் இறந்து கிடந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனச்சரகர் செல்வம், வனவர் சக்திவேல், கால்நடை டாக்டர் ரேவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். 8 வயது ஆண் கரடியும், 5 வயது பெண் கரடியும் இறந்து கிடப்பது தெரியவந்தது.கரடிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

குடிநீர் தேடி வந்தபோது கரடிகளுக்குள் ஏற்பட்ட மோதலால் கரடிகள் இறந்தனவா? அல்லது வேறு காரணமா? என்று சோதனை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அதே இடத்தில் கரடிகளின் உடல்கள் புதைக்கப்பட்டன.

இதேபோன்று முதுமலை பாம்பக்ஸ் முகாமில் யானைகள் வளர்க்கப்படுகிறது. இங்கு போதிய உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் நேற்று முகாமை விட்டு ஒரு யானை வெளியேறியது.

பின்னர் அருகில் உள்ள வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க சென்றது. அப்போது சேற்றில் சிக்கியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் கும்கியுடன் சேற்றில் சிக்கிய யானையை மீட்டனர்.

மீட்கப்பட்ட யானைக்கு சிகிச்சை மற்றும் ஊட்டச் சத்து வழங்கப்பட்டன. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் யானை உள்ளது. முகாமில் போதிய தண்ணீர் மற்றும் உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News