செய்திகள்

தஞ்சை, திருவாரூர்- நாகையில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

Published On 2017-02-22 07:51 GMT   |   Update On 2017-02-22 07:51 GMT
தமிழக சட்ட மன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து தஞ்சை, திருவாரூர், நாகையில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தமிழக சட்ட மன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது. தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை. சந்திர சேகரன் எம்.எல்.ஏ. தலைம தாங்கினார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், முன்னாள் அமைச்சர் உபயத்துல்லா, நகர செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம், ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, மகளிரணி காரல் மார்க்ஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண். ராமநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சாக்கோட்டை அன்பழகன், கோ.வி. செழியன், கும்பகோணம் நகர செயலாளர் சுப. தமிழழகன் மற்றும் கும்பகோணம், பாபநாசம், திருவிடை மருதூர், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார்.

இதில் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, நகர செயலாளர் வாரை. பிரகாஷ்,ஒன்றிய செயலாளர்கள் தேவா,சேகர் என்கிற கலியபெருமாள், பாலசந்தர், அவைத் தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம், இளைஞரணி துணை செயலாளர் ரஜினி ஜின்னா, முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் செந்தில் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரி திடலில் உண்ணாவிரதம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், நகர செயலாளர் போலீஸ் பன்னீர், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் உண்ணாவிரதம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், குத்தாலம் அன்பழகன்,ஜெகவீர பாண்டினம், சத்திய சீலன், பன்னீர் செல்வம், அருள் செல்வன் நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News