செய்திகள்
மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி: அலங்காநல்லூர்-தமுக்கத்தில் விசாரணை நீதிபதி ஆய்வு

Published On 2017-02-17 09:59 GMT   |   Update On 2017-02-17 09:59 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது குறித்து மதுரையில் விசாரணை கமி‌ஷன் நீதிபதி கள ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த மாதம் 15-ந்தேதி மாணவர்கள் போராட்டம் வெடித்தது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது.

இந்த சட்டம் கொண்டு வந்தும் மாணவர்கள் போராட்டம் நீடித்தது. கடந்த 23-ந்தேதி காலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பிரச்சினை ஏற்பட்டது.

சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மாணவர்கள் மீது நடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தடியடி சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.

அவர் சென்னை மெரீனா, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இன்று மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் களஆய்வு மேற்கொண்டார். காலையில் தமுக்கம், பெரியார் நிலையம், தத்தனேரி ரெயில் பாலம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தடியடி நடத்தப்பட்ட அலங்காநல்லூருக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போலீசாரின் தடியடி குறித்து தற்போது கள ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். 15 நாட்களுக்கு பிறகு விசாரணை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்பின் விசாரணை தொடங்கும். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பொதுமக்கள், போலீசாரால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணையில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Similar News