செய்திகள்
பஸ் மோதியதில் சேதமடைந்த மாட்டுக்கொட்டகை, நொடிந்த மின்கம்பம்

தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி

Published On 2017-02-17 05:32 GMT   |   Update On 2017-02-17 10:23 GMT
தேனி அருகே நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.
தேனி:

தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் குமார்(வயது26). அசாமில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் நண்பர்கள் அருண்பாண்டி(18), சூர்யா(20) ஆகியோருடன் நேற்று தேனி வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் போடி திரும்பினர்.

மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார். கோடாங்கிபட்டி அருகே ஒத்தவீடு பகுதியில் சென்றபோது எதிரே மூணாறில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் மின்கம்பம், மாட்டுக்கொட்டகை ஆகியவற்றின் மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த சிலர் காயமடைந்தனர்.

அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அருள்(37) என்பவரை கைது செய்தனர்.

Similar News