செய்திகள்

திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் ஓ. பி.எஸ். - தீபா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2017-02-14 09:33 GMT   |   Update On 2017-02-14 09:33 GMT
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து தி.மு.க. மற்றும் தீபா பேரவையினர், ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருச்சி:

திருச்சி தென்னூர் 50-வது வார்டு தி.மு.க. பிரதிநிதி எம்.ஆர்.குமார் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதில் தி.மு.க. பிரமுகர் அபூர்வா மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி கோர்ட்டு முன்பு தீபா பேரவை சார்பில் மாநில அமைப்பாளர் சாய்நாதன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் ஸ்ரீரங்கம், சோமரசம்பேட்டையில் தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

புதுக்கோட்டை எம்.ஜி.ஆர். சிலை முன்பு ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதே போல் மாவட்டத்திற்குட்பட்ட கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு உள்ளிட்ட இடங்களிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கரூர் காக்காவாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

காக்காவாடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி கழக செயலாளர் தினேஷ் தலைமையில் நகர இணை செயலாளர் அசோக்குமார், நகர பாசறை துணை செயலாளர் தினேஷ், ஈஸ்வரமூர்த்தி , சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரியலூரில் முன்னாள் எம்.எல்.ஏ.இளவழகன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Similar News