சொத்துக்குவிப்பு-செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி மீதான விசாரணை 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம்:
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.யுமான பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக 2002-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ. ஆஜரானார். விசாலாட்சி பொன்முடி ஆஜராகவில்லை.
அவர் சார்பில் தி.மு.க. வக்கீல்கள் சுப்பிரமணியன், நடராஜன், ஷெரீப், கல்பட்டு ராஜா, சுவைசுரேஷ், ஏழுமலை ஆகியோர் ஆஜராகி விசாலாட்சி பொன்முடி ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சுபாஅன்புமணி, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதேபோல் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மகன் கவுதமசிகாமணி, கோதகுமார், ராஜமகேந்திரன், பள்ளியந்தூர் ஜெயச்சந்திரன், சதானந்தன், லோகநாதன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் ஆஜரானார்கள்.
கவுதமசிகாமணி மட்டும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சுபாஅன்புமணி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.