செய்திகள்

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை: திவாகரன் குற்றச்சாட்டு

Published On 2017-01-20 04:59 GMT   |   Update On 2017-01-20 04:59 GMT
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என சசிககலா சகோதரர் திவாகரன் கூறினார்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள சுந்தரக்கோட்டையில் அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகம் பல முறை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்கவில்லை. அதற்காக அம் மாநில அரசு கலைக்கப்பட வில்லை. இந்தியாவில் மற்ற மாநிலங்கள் சட்டத்துக்கு கட்டுப்படுவதில்லை.

எனினும் தமிழகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற மாண்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழர்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை.

வார்தா புயல் அடித்து 10 நாட்கள் கழித்து தான் மத்திய அரசு ஆய்வுக் குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது.

ஆனால் புயல் நிவாரண தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசு வேகமாக செயல்படவில்லை.

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. 3-வது பெரிய கட்சியாக உள்ள நிலையில் தமிழக எம்.பி.க்களை தொடர்ந்து 3-வது முறையாக சந்திக்க பிரதமர் மறுத்துள்ளார்.

இது போன்ற அணுகுமுறைகள் தமிழகத்தில் உள்ள மாணவர்களை, இளைஞர்களை கோபப்படுத்தி உள்ளதையே தற்போதைய போராட்டங்கள் உணர்த்துகின்றன.

கடந்த அண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரிக்கும் என்பதை முன் கூட்டிய கணிக்க உளவு பிரிவு போலீசார் தவறி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News