செய்திகள்

ஜல்லிக்கட்டு நடக்கும் தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்: மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை

Published On 2017-01-20 03:39 GMT   |   Update On 2017-01-20 05:52 GMT
நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று இளைஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
சென்னை:

தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க கோரி மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொண்டுள்ள தொடர் போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெரீனா கடற்கரையில் மாணவர்களிடம் காணப்படும் ஆவேசம் தமிழ் இனத்தின் அடையாளத்தை உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்த வழி வகை செய்ய புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு வந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டு கோள்விடுத்தார். இதுபற்றி போராட்டம் நடத்தி வரும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு மாணவர்கள் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக புதிய சட்டம் இயற்றுவதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெறும் வாய்மொழியாகத்தான் கூறி உள்ளார். ஜல்லிக்கட்டு நடக்கும் வகையில் அவர் எந்தவித உத்தரவாதமும் இதுவரை கொடுக்கவில்லை.

ஜல்லிக்கட்டு எந்த தேதியில் நடைபெறும் என்று அரசு தரப்பில் மிக தெளிவாக சொல்ல வேண்டும். வாடிவாசலில் எந்த தேதியில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்பது உறுதியாக தெரியும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்.

இறுதி முடிவு தெரியும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு மாணவர்கள் கூறினார்கள்.

Similar News