செய்திகள்
மாமனார் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண்.

கணவரை ஒப்படைக்ககோரி மாமனார் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்

Published On 2016-12-27 11:44 GMT   |   Update On 2016-12-27 11:44 GMT
திண்டுக்கல் அருகே கணவரை ஒப்படைக்கும்படி மாமனார் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தினார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகள் கார்த்திகா(வயது26). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நத்தம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அப்போது சாணார்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் நிர்மல்ராஜ்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த ஆண்டு நிர்மல்ராஜ் திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றிவிட்டதாக திண்டுக்கல் மகளிர் போலீசில் கார்த்திகா புகார் செய்தார்.

போலீசார் நிர்மல்ராஜை கைது செய்து விசாரித்தனர். பிறகு சமாதானம் பேசி 2015 டிசம்பர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனை நிர்மல்ராஜ் பெற்றோர் ஏற்கவில்லை. இதையடுத்து நிர்மல்ராஜ் மனைவியுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். அவ்வப்போது பெற்றோரை பார்ப்பதற்கு சாணார்பட்டி சென்றுவருவார். இதுபோன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிர்மல்ராஜ் திரும்பிவரவில்லை.

கார்த்திகாவால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. மாமனர்-மாமியாரிடம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கார்த்திகா சாணார்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுமுன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் போலீசார் அவரை அழைத்து சென்று சமரச பேச்சு நடத்தினர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.

Similar News