செய்திகள்

தேனி அருகே மனைவி-2 மகள்களை கொன்ற வியாபாரி தற்கொலை முயற்சி

Published On 2016-12-07 06:35 GMT   |   Update On 2016-12-07 06:35 GMT
தேனி அருகே தொழில் நஷ்டத்தால் மனைவி, 2 மகள்களை கொன்ற வியாபாரி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
உத்தமபாளையம்:

தேனி அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது44). இவரது மனைவி ஜமுனா(40). காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களது மகள்கள் ஐஸ்வர்யா(15), அபிநயா(11).

முருகன் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். ஊர்ஊராக சென்று தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வந்தார். இதில் பணம் முடங்கியதால் தொழில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்ததால் மீள முடியவில்லை. இதனால் விரக்கியடைந்த முருகன் குடும்பத்தோடு தற்கொலை செய்ய எண்ணினார்.

சம்பவத்தன்று குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றபின்னர் வீட்டில் தனியாக இருந்த மனைவி ஜமுனாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை மறைத்து வைத்துவிட்டு சின்னமனூரில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றார்.

மதியம் அங்கிருந்து பள்ளிக்கு சென்று இளையமகள் அபிநயாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். அம்மா எங்கே என்று கேட்ட அபிநயாவையும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

அவளது உடலையும் மனைவி உடலுடன் சேர்த்து வைத்தார். மாலையில் பள்ளி முடிந்ததும் மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு திரும்பினாள். அவளையும் கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

மனைவி மற்றும் மகள்களை கொன்ற குற்ற உணர்வில் தவித்த முருகன் விடிய விடிய தூங்காமல் இருந்துள்ளார். அதிகாலையில் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அதிகளவு ரத்தம் வெளியேறியதால் மயங்கி கிடந்தார்.

நேற்று காலை அவரது தம்பி கண்ணன் அங்கு வந்தார். அப்போது அந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக முருகனை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் உத்தமபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

3 பேர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து முருகன் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் எனது குடும்பத்தினர் சாவில் சந்தேகம் கொள்ள வேண்டாம். தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதனால்தான் மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News