திருச்சி வெடி ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே முருங்கப்பட்டியில் வெடி மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். இதில் சிலரது உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்கள் சின்னாபின்னமாக சிதறி யதில் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் துறையூர், திருச்சி, சேலம் மாவட்டம் தம்பம்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் அங்குள்ள ஆலையில் பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த பிரவீன் என்பவர் தப்பிப்பதற்காக ஓடி வந்தார். அப்போது ஆலையில் இருந்து சிதறிய கல் அவர் தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் வெடி ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.