செய்திகள்

உறவு முறையை மறந்து காதல்: இளம்பெண் கொலையில் வாலிபர் கைது

Published On 2016-11-29 05:34 GMT   |   Update On 2016-11-29 09:32 GMT
திருவலம் அருகே தகாத உறவை மறைக்க, விஷ ஊசி போட்டு, தங்கையை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை:

காட்பாடி அருகே உள்ள 66 புத்தூர் ஊராட்சி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகள் அமுதா (வயது17). பிளஸ்-2 முடித்து விட்டு டெய்லரிங் படித்து வந்தார்.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் சபரி (வயது20) கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு அமுதா தங்கை உறவு முறை.

சபரி அடிக்கடி லெட்சுமி புரம் கிராமத்துக்கு வந்தார். அப்போது அண்ணன், தங்கை உறவு முறையை மறந்து இருவரும் காதலிக்க தொடங்கினர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சபரி லெட்சுமிபுரம் கிராமத்துக்கு வந்தார். உறவினர் என்பதால் அமுதாவின் வீட்டிலேயே தங்கினார்.

அமுதாவின் பெற்றோர்கள் நிலத்துக்கு சென்றதும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். 10 நாட்களாக அத்துமீறிய சபரி மீது அமுதாவின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

நேற்று இரவு அமுதாவின் பெற்றோர் விவசாய நிலத்துக்கு சென்றிருந்தனர். அப்போது சபரி, அமுதா வீட்டில் இருந்தனர்.

இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உல்லாசமாக இருந்தது வெளியே தெரிந்து விட்டால் அவமானம் என நினைத்த சபரி அமுதாவை கொலை செய்ய முடிவு செய்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமுதாவை அடித்து கீழே தள்ளினார். அவரது உடலில் வி‌ஷ ஊசி போட்டுள்ளார். இதில் மயங்கிய அமுதாவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினார். இதில் துடிதுடித்த அமுதா பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரை வீட்டில் தூக்கில் தொங்க விட்டு விட்டு சென்று விட்டார்.

நிலத்துக்கு சென்று திரும்பிய பெற்றோர் அமுதா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். இது பற்றி திருவலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

தூக்கில் தொங்கிய அமுதா தூக்கிட்டு இறந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த 10 நாட்களாக தங்கியிருந்த சபரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது தகாத உறவு காரணமாக தங்கையை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News