நெல்லை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய டிரைவர் கைது
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மேல திருவேங்கட நாதபுரம் கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் ஆதித்தன் (வயது22). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி லதா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்பவருடன் ஆதித்தனுக்கு காதல் மலர்ந்தது. ஆதித்தன் கார் டிரைவர் என்பதால் இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றினர்.
அப்போது ஆதித்தன், லதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்தார். இதில் லதா கர்ப்பிணி ஆனார். இதனால் லதா வீட்டில் அதிர்ச்சியடைந்து, அவரை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்தனர்.
லதா கர்ப்பிணி ஆனதால் அவருக்கும் ஆதித்தனுக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்க லதாவின் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆதித்தனும், அவரது குடும்பத்தினரும் மறுத்து விட்டனர். லதாவும் பலமுறை ஆதித்தனை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் பேச மறுத்து தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து லதா, அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கார் டிரைவர் ஆதித்தன் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான ஆதித்தனை நேற்று மகளிர் போலீசார் கைது செய்தனர்.