செய்திகள்

500, 1000 ரூபாய் செல்லாது: மோடி அறிவிப்பை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட்டு

Published On 2016-11-10 09:41 GMT   |   Update On 2016-11-10 09:41 GMT
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
மதுரை:

நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களை ஒடுக்கவும் மத்திய அரசு புதிய செயல்பாட்டில் இறங்கி உள்ளது. இதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அவை இனி காகிதங்கள்தான் என பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த முடிவை எதிர்த்து இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் சீனிஅகமது, மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பிரதமர் மோடி, திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு செய்துள்ளார். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

இந்த மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கு தவறானது. நாட்டின் நன்மையை கருதியும், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதை தடுக்கவும், ஊழல், கறுப்பு பணம் பதுக்கலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவரே வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு உள்ளன. எனவே மனு தாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. சிரமங்கள் இருப்பினும், நிரந்தர பலனை கருத்தில் கொண்டு மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Similar News