செய்திகள்

வாணியம்பாடி அருகே 2 குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை முயற்சி

Published On 2016-10-28 10:59 GMT   |   Update On 2016-10-28 11:00 GMT
வாணியம்பாடி அருகே தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தராததால் விரக்தி அடைந்த இளம்பெண் 2 குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா அல்லேரியான் வட்டத்தை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது மனைவி ரம்யா (வயது 28). இவர்களுக்கு ஆஷா (5), ஹேமவர்ஷினி (3) என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கோபாலிடம் தீபாவளி பண்டிகையை கொண்டாட புது ஆடைகளை வாங்கி தருமாறு மனைவி ரம்யா கேட்டார். தற்போது பணம் இல்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கோபால் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்காவது புது துணிகள் வாங்கி தருமாறு ரம்யா கேட்டார். அதற்கும் கோபால் மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்றிரவும் தகராறு நீடித்தது. மனைவியை கண்டித்த கோபால், வெளியில் புறப்பட்டு சென்று விட்டார். இதனால் ரம்யா மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்ட பிறகு, குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என எண்ணிய ரம்யா, குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார்.

கடைக்கு சென்ற ரம்யா, மாம்பழச்சாறு நிறைந்த ஜூஸ் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். மாம்பழச்சாறில் பூச்சி மருந்தை கலந்தார். வி‌ஷம் கலந்த மாம்பழச்சாற்றை டம்ளரில் ஊற்றி 2 பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தார்.

பிறகு, தானும் குடித்தார். வி‌ஷம் கலந்த மாம்பழச்சாறு குடித்த சில நிமிடங்களில் ரம்யா, அவரது குழந்தைகள் மயங்கினர். அக்கம், பக்கத்தினர் ரம்யாவையும், 2 குழந்தைகளையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News