செய்திகள்

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

Published On 2016-10-25 06:53 GMT   |   Update On 2016-10-25 06:53 GMT
தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தடங்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுரேஷ் (வயது 27). கொத்தனார். திருமணம் ஆகவில்லை.

அதே பகுதியை சேர்ந்த காண்ட்ராக்டர் மாதையன் என்பவர் ஒப்பந்தம் எடுத்து புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீடு கட்டும் பணியில் சுரேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நபர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று சுரேஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயராமன் ஆகிய இருவரும் வீட்டுக்குள் உள்ள குளியல் அறை சுவரில் சிமெண்ட் பூசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போதிய வெளிச்சம் இல்லாததால் டியூப் லைட் ஒன்றை கட்டையில் வைத்து கட்டி, அந்த வெளிச்சத்தில் சிமெண்ட் பூசும் வேலை நடைபெற்றது.

பின்னர் மாலை நேரம் ஆனதும் இருவரும் வேலையை முடித்து விட்டு, அங்கிருந்து வெளியே வந்தனர். அப்போது, சுரேஷ் டியூப் லைட்டை எடுப்பதற்காக குளியல் அறைக்குள் சென்றார். அவர் கட்டையில் இருந்து டியூப் லைட்டை எடுத்த போது, அவரது கை ஈரமாக இருந்ததால் மின்சாரம் தாக்கியது.

இதில், பலத்த காயம் அடைந்த அவரை நண்பர் ஜெயராமன் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News