செய்திகள்

படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளிக்கும் 6 குமரி மீனவர்கள்: மீட்க கோரி குடும்பத்தினர் மனு

Published On 2016-10-24 12:21 GMT   |   Update On 2016-10-24 12:21 GMT
குமரியில் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களை மீட்க கோரி குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முட்டம் அருகே உள்ள சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ஜான்கென்னடி என்பவருக்கு சொந்தமான பைபர் படகு மூலம் அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தோமஸ் (வயது 55), ஆண்டனி (52), லோபஸ் (54), கிறிஸ்டோபர் (60), குருமான் (58) ஆகிய 6 மீனவர்கள் பைபர் படகு மூலம் கடந்த 20-ந் தேதி ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

முட்டத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது படகில் பழுது ஏற்பட்டது. இதனால் இந்த 6 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக மற்ற மீனவர்கள் இதை பார்த்து அந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த 6 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் இன்று நாகர்கோவிலில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்து மனு கொடுத்தனர். அவர்களுடன் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சிலும் உடன் வந்திருந்தார்.

அவர் கூறும்போது நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களின் படகு காற்று மற்றும் அலை காரணமாக சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்லும் நிலை உள்ளது. மேலும் அந்த படகில் உள்ள 6 மீனவர்களும் வயதானவர்கள் என்பதால் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Similar News