செய்திகள்

திருப்பூரில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை சூடு வைத்து சித்ரவதை: வாலிபர் கைது

Published On 2016-10-24 07:22 GMT   |   Update On 2016-10-24 09:15 GMT
திருப்பூரில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை சூடு வைத்து சித்ரவதை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் முத்தையன் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சண்முகபிரியா (21). பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த இவருடைய உறவினர் சின்னசாமியின் மகன் பத்மநாபன்(23). இவரும் பனியன் நிறுவன தொழிலாளி.

உறவினர்களான பத்மநாபன், சண்முகப்பிரியா ஆகியோர் காதலித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் சண்முகப்பிரியாவின் வீட்டுக்கு வந்த பத்மநாபன், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சண்முகப்பிரியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பத்மநாபன், ‘‘நீ என்னை விட அழகாய் இருப்பதால் தானே திருமணம் செய்ய மறுக்கிறாய்! உன் அழகை கெடுத்து விடுகிறேன் பார்...’’ என ஆவேசமாக கூறி கொண்டே சமையல் அறைக்குள் சென்றார். அங்கு சூடாக இருந்த தோசைக்கல்லை எடுத்து சண்முகப் பிரியாவின் முகத்திலும், கைகளிலும் சூடு வைத்து சித்ரவதை செய்தார்.

இதில் சண்முக பிரியாவின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சண்முக பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மநாபனை கைதுசெய்தனர்.

Similar News