செய்திகள்

கவுரவ கொலை செய்வதாக மிரட்டல்: வேலூர் எஸ்.பி. ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-10-23 12:04 GMT   |   Update On 2016-10-23 12:04 GMT
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

வேலூர்:

வேலூர் அடுத்த அரியூர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சங்கவி (வயது 18). தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சங்கவிக்கு, வேலூர் அருகே உள்ள செம்பேடு பகுதியை சேர்ந்த தயாளன் மகன் மோகன் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

மோகன் மாட்டு வண்டி தொழிலாளியாக உள்ளார். சங்கவிக்கும், மோகனுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இவர்களின் காதல் விவகாரம் நாளடைவில் வெளிச்சத்துக்கு வந்தது. பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், சங்கவியும், மோகனும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் ஜோடிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காதல் ஜோடி இருவரும் சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர்.

வேளாங்கன்னிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே மகள் மாயமானதாகவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் சங்கவியின் பெற்றோர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சங்கவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், திருமணம் செய்து கொண்ட சங்கவியும், மோகனும் பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தனர்.

அப்போது, சங்கவி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்:- நானும், காதலன் மோகனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

எங்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். எங்களை கவுரவ கொலை செய்து விடுவதாக என்னுடைய பெற்றோர் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News